15/07/2026
தாங்க முடியாத ஒலிமாசு!
மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வசிக்கும் ஒரு நாட்டில், அதன் சமூகங்களில் பொதுவெளிகளை (public spaces) திறந்தவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாக, அமைதியானவையாக வைத்திருக்க வேண்டும். இது common sense!
ஆனால் நம்முடைய பழம்பெரும் நாடான பாரத நாட்டில், தங்கத்தமிழ் நாட்டில், குறிப்பாக கற்றோர் அதிகமெனக் கொண்டாடப்படும் குமரி மாவட்டத்தில் நடப்பவை எல்லாம் தலைகீழாகவே இருக்கின்றன.
"காசேதான் கடவுளடா" என்றாகியிருக்கும் உலகமயச் சூழலில் தெய்வங்கள் எல்லாம் கேட்கும் திறனை வேகமாக இழந்து வருவதாலோ என்னவோ, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் பாடல்களை, பூசைகளை உரக்க ஒலி பரப்புகிறார்கள். செவிட்டுக் கடவுள்களும், குருட்டு பக்தர்களும், ஊமை அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் ஒலி மாசுக் கொடூரம் அளவுகடந்து போய்க் கொண்டிருக்கிறது.
ஒருவரை அவரது இசைவின்றித் தொட்டால் குற்றம், வெறித்து நோக்கினால் குற்றம், அவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தினால் குற்றம். ஆனால் ஒரு கூட்டம் சேர்ந்து கூம்புவடிவக் குழாய்களை விஞ்சும் பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டிகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, காது கிழிய, மூளை அதிர, இதயம் குலுங்க, இரத்த நாளங்கள் எல்லாம் வெடிக்க, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒலி மாசு ஏற்படுத்தினால் அது குற்றமல்ல, மாசுபடுத்துபவர்களின் உரிமை!
வயதானவர்கள், நோயாளிகள், பச்சைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மாணவச் செல்வங்கள், விலங்குகள், பறவைகள் யாரும், எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் கோவில் கொடை விழாக்கள் ஊரெல்லாம் கேட்க வேண்டும். இவர்களின் தலைவர்களின் மகாத்மியம் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும். இவர்கள் வீட்டுக் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், சாவு என எல்லாம் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
இந்த காட்டுமிராண்டிகளுக்கு அடுத்தவரின் உடல்நலம், மனநலம், கேட்கும் திறன், அமைதி எதுவுமே ஒரு பொருட்டல்ல. ஒலிமாசு காரணத்தால் நம்முடைய வீட்டுக்குள் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடியாது. ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று உரையாட இயலாது. ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆகாது. தலைவலி வருகிறது, மனஉளைச்சல் எழுகிறது, கோபமும் எரிச்சலும் வருகிறது, உறவுகள் பாதிப்படைகின்றன.
ஆனால் ஒலிமாசாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது இடைவிடாது உங்கள் காதுகளுக்குள் திரைப்படப் பாடல்கள், இசைக்கருவிகள், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளின் ஒலிகளை உருவாக்கி உங்களை "ரேப்" (ஆமாம், இதுவும் r**e தான்!) செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் அவர்களின் இன்பத்தில் பங்கேற்று அனுபவித்து மகிழ வேண்டும் (ஒரு ra**st உடைய logic-ம் இதுதான்!)
வரலாறு பற்றி எழுதும்போது Friedrich Nietzsche மாடுகளுக்கு அந்த உணர்வோ, திறனோ, தேவையோ கிடையாது என்று குறிப்பிடுவார். அதேபோல, இந்த ஒலிமாசு ஏற்படுத்தும் மாடுகளுக்கு பிற மனிதர்களின் உரிமைகள், வாழ்வின் இனிமை, நல்வாழ்வு போன்றவை பற்றியெல்லாம் எந்த அடிப்படை அறிவும் கிடையாது, கவலையும் கிடையாது.
சாதி, மதம், கட்சி, தனிநபர் துதி போன்ற குண்டுச் சட்டிகளுக்குள் குதிரை ஓட்டி, அதன் மூலம் தம் வயிறுகளையும் வளர்த்து, வாழ்க்கைக்கு அர்த்தமும் பெறுவதாக நினைத்துக் கொள்ளும் இந்த பிறவிகளைப் பற்றி நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
இவர்களிடம் civic sense, decent living பற்றியெல்லாம் வகுப்பு எடுப்பதில் அர்த்தமில்லை. தொப்பை நிறைய மதுவும், கையில் காசும், மனதில் கொண்டாட்டமுமாக திரியும் இந்தப் பிறவிகளிடம் மோதுவது வீண் வேலை.
அப்படியானால் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? மாவட்ட நிர்வாகமும், சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களும்தான் பொறுப்பு. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். காரணம் அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி, ஒலி மாசு கூடாது என்று ஒரு நிலைப்பாடு எடுத்தால், உடனே எழுதப் படிக்கத் தெரியாத ஓர் அரசியல்வாதி, அல்லது மதகுரு அழைத்து மிரட்டுவான். இவர்கள் பணிந்துதான் போக வேண்டி வரும். எனவே எக்கேடும் கேட்டு நாசமாகப் போங்கள் என்று பொதுமக்களை கைவிட்டுவிட்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வீடு, காவல்துறை கண்காணிப்பாளர் வீடு, அலுவலகங்கள், காவல் நிலையங்கள் அருகே யாரும் ஒலி மாசு ஏற்படுத்த முடியாது, அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் பொதுமக்கள் நொந்து, வெந்து சாவதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சில அதிகாரிகளிடம் என்னை/நம்மைப் போன்ற யாராவது முறையிட்டால், யார் அழைத்து முறையிட்டார்கள் என்கிற தகவலையும் உரியவர்களிடம் சொல்லிவிட்டு, ஐந்து நிமிடம் ஒலியைக் குறைக்கச் செய்வார்கள்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு தேர்ந்த, அருமையான அதிகாரி. பிரச்சினையைப் புரிந்து கொள்கிறார். புதிய மாவட்ட ஆட்சியர் வந்திருக்கிறார். அவரையும் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். ஆனால் இந்த இரண்டு அதிகாரிகளும் மட்டும் எதுவும் செய்ய இயலாதே?
மாநில அரசு திரைத்துறையின் நீட்சியாகவே இருந்து வருகிறது. மத்திய அரசு இந்துக்கள் நாட்டில் இந்துக்களுக்கு பக்திப் பாடல்கள், கோவில் கொண்டாட்டங்கள் ஒலிபரப்ப உரிமை இல்லையா என்று உரிமைக் குரல் எழுப்பும் மதவாதக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. இவர்கள் எப்படி ஒலிமாசுக்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுப்பார்கள்?
எது எப்படியானாலும், பொதுமக்களின் உரிமைகளுக்கு, நல்வாழ்வுக்கு உள்ளூர் அதிகாரிகளேப் பொறுப்பேற்றாக வேண்டும். அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதுதான் நம்முடையப் பணி.
(1) ஒலிமாசின் அளவைக் குறைக்க வேண்டும். ஒலிபெருக்கி கருவிகளுக்கு கட்டுப்பாடு வேண்டும். இவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். சவுண்ட் சிஸ்டம் வைத்திருப்போரிடம் உறுதியாகப் பேச வேண்டும்.
(2) அதிகாலை, பின்னிரவு நேரங்களில் எந்த சத்தமும் இல்லாத அமைதி நம் அனைவரின் உரிமை என்றாக வேண்டும். கோவில்களில் ஒலிமாசு ஏற்படுத்துவோர் இரவுகளில் கோவில்களுக்குள்ளே மட்டுமே ஒலி எழுப்ப முடியும், ஒலி பெருக்கிகளை உபயோகப்படுத்தக் கூடாது என்கிற அமைப்பு வேண்டும்.
(3) கோவிலுக்கு அந்தப் பக்கம் ஒரு கிலோமீட்டர், இந்தப் பக்கம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒலிபெருக்கிகள் நிறுவி ஊரையே அதகளப்படுத்தும் அவலத்தைத் தடைசெய்ய வேண்டும்.
(4) ஒலிமாசுப் பிரச்சினையால் வீட்டில் அமைதியாக தூங்க, வாழ முடியாதவர்கள் தங்குவதற்கு தற்காலிகப் புகலிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.
(5) ஒலிமாசுப் பிரச்சினைக்கு, அதனால் ஏற்படும் காது கேளாமை, தலைவலி, மனநலக்குறைவு போன்ற தனிப்பட்ட இழப்புக்களை சந்திப்போர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து நட்டஈடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மேல் நடவடிக்கைகள் குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள் தோழர்களே, நன்றி.
சுப. உதயகுமாரன்
தலைமைப் பணியாளர்:
பச்சைத் தமிழகம் கட்சி
நாகர்கோவில்,
யூலை 15, 2026.